செல்வசங்கரன் கவிதைகள்

by olaichuvadi


அமோகமாக பெருகுகிற வாழ்வு

கோபத்தில் சுவரில் கையை முட்டிக் கொண்டவர்
ஒரு சிறிய துளையை சுவரில் மறந்து வைத்துவிட்டுப் போகிறார்
எப்படியும் அதை மறுநாள் வந்து எடுக்க வருவார்
துளை பார்க்க அப்படியே என்னை மாதிரியே இருக்கிறதென
அப்பொழுது பூரிப்பார் பாருங்கள் என்றது அந்த துளை
அவரைப் பற்றி முழுமையாக அதற்கு மட்டுமே தெரியும்
ஏனெனில் அது அவர் சம்பாதித்த துளை
அந்த துளையைத் தான் அவருடைய அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்
அவருடைய காலி மனையில் பூமி பூஜையின் போது
ஒருநாள் அதை ஒரு புகைப்படமாக்கி புதிய வாழ்வைத் துவக்கினார்
அமோகமாக பெருகுகிறது வாழ்வு என்றார்
எப்படிப் பார்த்தாலும் அந்த துளை அவர் கட்டியது
பார்த்து பார்த்து அவருக்காக அவர் போட்டது
அதனால் தான் அவருடைய கையை அவரிடமே அது கொடுத்துவிட்டது
அந்த கையை எடுத்துக் கொண்டு போய் தான்
நகரெங்கிலும் துளைகளை இட்ட வண்ணமாக உள்ளார்
என்னவென யாராவது நிறுத்திக் கேட்டால்
முகத்தில் ஓங்கி ஒன்று விட்டால் சாகவிருக்கின்றவர்களை
பண்டுவம் பார்த்து வருகிறேன் என்பதைப் பதிலாகத் தருகிறார்
அந்தப் பதிலை வைத்து ஒருவர்
துளையை அடைத்து அடைத்துப் பார்த்தார் அது முடியவேயில்லை

இடைவெளி

வெகு நாட்களாக கடலையே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்
அவருக்கும் கடலுக்குமான இடைவெளியை ஒரு பொருளாக மாற்றி
அதில் அமர்ந்திருந்தார்
அந்த இடைவெளியில் தரை இருக்கிறது உயரமான எதுவுமில்லை
பாலம் என்றால் நன்றாக உட்கார்ந்து இன்னும் நன்றாக பார்ப்பாரல்லவா
ஆனால் சதா வண்டிகள் போகும் விளிம்பில் ஆட்கள் வந்து அமருவர்
வேண்டாமென்றதும் கட்டாத பாலத்திற்கு
அப்படியென்ன ரோசமென்று தெரியவில்லை
அவருக்கும் கடலுக்குமான அந்தரத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது
அப்பொழுதும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தார்
இடிந்து விழுந்த அந்த பாலத்தைப் பற்றி அவருக்கு
எதுவுமே தெரியாதது போலிருந்தது
உலகம் என்ற வஸ்தையே கூட அவர் மறந்துதான் இருந்தார்
அவர் பார்க்கின்றதைப் பார்த்தால்
அவருக்கும் கடலுக்கும் இடைவெளி என்று இந்நேரத்திற்கு
எதுவுமே இருக்காதென்றே தோன்றுகிறது
இல்லாத இடைவெளியில் தான் ஒரு மாமாங்கம் வாழ்ந்து வந்திருக்கிறேன்
என்பது இந்த உலகிற்கு எவ்வளவு வியக்கத்தக்க ஒரு நிகழ்ச்சி

கண்ணீரின் உருண்டை வடிவம்

கண்ணீரின் உருண்டை வடிவம் என
யாரோ கண்ணீரின் வடிவில் மயங்கி சொல்லிவிட்டார்
மொத்த உருண்டைகளுக்கும் புகைச்சல்
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தூக்க முடியாது
உற்றுக் கவனித்தால் அந்தரத்தில் முட்டை வடிவில் இந்த பூமிக்கு வரும்
கன்னத்தில் இறங்கி வழிகிற போது அது நல்ல சப்பட்டை
இன்னும் என்னென்னல்லாமோ சொல்லி உருண்டைகள் குழப்பின
உருண்டைப் பாரம்பரியத்திலேயே அதைச் சேர்க்க முடியாதென

வரிந்து கட்டி நின்றன
சப்பட்டைகள் போடுகின்ற உப்புக்கரிக்கின்ற வெள்ளைக் கோடு
கண் கொண்டு காணச் சகிக்காது என
தலைப்பிற்கு வெளியேயும் சில உருண்டைகள் உருட்டின
பேசிக்கொண்டேயிருந்தால் காதை மூடிவிடுவார்கள்
யாராலும் கண்ணை மூட முடியாது
வாருங்கள் உருண்டையென்றால் என்னவென்று காட்டுவோம்
இரண்டு கைகள் நீட்டி உலக உருண்டை விளித்ததும்
பள்ளம் மேடு வெளிச்சம் இருட்டு பாராமல்
உருண்டைகள் எங்கும் அதிசயங்களை நிகழ்த்தத் துவங்கின

கண்ணகியின் ஸ்தனம் கழன்று அவள் கையில் வந்தது
சின்னஞ் சிறியவொன்று எவ்வளவு பென்னம் பெரியவொன்றைச்
செய்துவிட்டது
சின்னஞ் சிறியவைகள் இங்கு இன்னும் என்னென்ன செய்யக்
காத்துக் கொண்டிருக்கின்றனவோ

பிற படைப்புகள்

Leave a Comment