அலுவலகம் சில குறிப்புகள்
ச.துரை

by olaichuvadi

சிவப்பு

எப்போதைக்கும் போல்தான்
அந்நாளும் கொடுக்கப்பட்டது
எனது வெள்ளை கையுறை திடீரென சிவந்தது
பதறினேன் அதை மேலதிகாரி கவனிக்கவில்லை
ஆனாலும் பயந்தேன் கால்சாராய்க்குள்
கைநுழைத்து எடுக்கும் போது
சுட்டுவிரல் உள்ளேயே விழுந்துவிட்டது
சக பணியாளன் புன்முறுவலோடு அதைப் பார்த்தான்
திரும்பத் திரும்ப கையை நுழைத்து
விரலை எடுக்க முயன்றேன்
இப்போது எல்லோரும் பார்த்து விட்டார்கள்
சிவந்த கையுறை எங்கே போனதென்று தெரியவில்லை
பின்கதவின் வழியே ரகசியமாக
என்னை கொண்டு செல்லும் போது
கோட்டையின் பாதியை திறந்தார்கள்
அங்கு குவிந்திருந்தன ஏகப்பட்ட சுட்டுவிரல்கள்.

கருப்பு

எல்லோரும் உறங்கப் போனதும்
எனது சீருடை சொன்னது
உன்னால் உறங்க முடியாது
உன் மேலதிகாரி உன்னை விட
என்னைதான் அதிகம் நேசிக்கிறான்
நான் எதுவும் கூறவில்லை
அந்த பைப்பர் கூடம் காற்றில் ஆடியது
விடியும் போது நகர்ந்து வேறு
இடத்திற்க்கு போய்விடுமென நினைத்தேன்
காற்றில் குலுங்க குலுங்க சிரித்தபடி
சீரூடை மீண்டும் சொன்னது
எப்போதும் நான் கீழே விழலாம் பிறகு நீ இலைகள்
உறங்குவதில்லையென பாடத் தயாராயிரு.

பச்சை

நிறைய புகார்களுக்கு மத்தியில் எனது
ஷுவை கழற்றச் சொன்னார்கள்
அதனுள் ஒரு சேரி படுத்திருப்பதாக
உதவியாளன் புகாரளித்தான்
மேலதிகாரி தனது மூக்கை பின்னந்தலைக்கு
மாற்றி வைத்தபடி நெருங்கினார்
உன்னுடைய எதற்கும் உதவாத சப்பாத்துகள்
மிதிபட தரையை கட்டவில்லை புரிகிறதா
நான் மிரண்டு போனேன்
உனது நல்ல ஷுக்கள் எங்கே?
படபடத்தபடியே பூர்வீகத்தில் என்றேன்.

சாம்பல்

மணல்கடிகாரத்தை இடையிலே நிறுத்தும்
அதிகாரம் கூட இல்லாத போதும்
அதை படுக்க வைக்க விரும்பினேன்
கொஞ்சம் கூட கனவுகளை நிமிர்த்த எண்ணியதில்லை
காய்ச்சிய இரும்பு ராடுகளை சுமக்கும்
நமது பற்களுக்கு இதெல்லாம் தேவையா என்பார்கள்
எதுவுமே தெரியாத மாதிரி வாழ முகம் கிடைத்திருக்கிறது
அதன் மேல் தினமும் இரும்பு ராடுகள் சரிய
முகத்தில் ஏகப்பட்ட பள்ளங்கள்
ஒவ்வொரு நாளும் அதில் மழை தேங்கியபடியே இருக்கிறது.

நீலம்

உயரமான சுவர்களுக்கு அடுத்து கடற்கரை வந்தது
எல்லோரும் இறங்கினோம்
நிறைய உதவியாளர்கள் இருந்தார்கள்
மேலதிகாரி பாதி உடயையோடு எங்களை நோக்கினார்
நீங்கள் குளிக்கலாம் ஆனால் உடைகளோடு என்றார்
எங்களுக்குள்ளே முகங்களை பார்த்தோம்
சீருடைகள் கடலை பார்த்தன.

செங்கருப்பு

சுற்றளவு விட்டமென தோண்டி
கற்கள் உறைகளென பூசப்பட்ட பின்
கிணற்றின் இடை இடையே இருந்த துளைகளை
மேலதிகாரி பார்த்தார்
பிறகு எங்களின் சிலரை துளைகளில்
நாள்முழுக்க பூசியபடி நிற்க வைத்தார்.

காவி

அன்று மதிலிலிருந்த பூனையொன்று
வெல்வேட் வெண் நிற திரைச்சீலையில் குதித்தது
எனக்கு என்ன செய்வதென்று தோன்றாத போதும்
சீலையின் கரையை உற்று நோக்கினேன்
அதிலிருந்த குட்டி குட்டி கரைகள் நீண்டு
ஒரு வரைபடத்தை நிவர்த்தி செய்தது
அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்
அபாயமணி ஒலித்தது எல்லோரும் என்னை தாண்டி
ஒருவன் தப்பித்துவிட்டான் என ஓடிக்கொண்டிருந்தார்கள்.

பிற படைப்புகள்

2 comments

Syedali abdulkader August 10, 2020 - 3:06 pm

Excellent poems durai

Reply
பூவிதழ் உமேஷ் August 11, 2020 - 3:27 am

வேற லெவல் கவிதை நண்பா

Reply

Leave a Reply to Syedali abdulkader Cancel Reply