வெய்யில் கவிதைகள்
வெய்யில்

by olaichuvadi

சித்தசுவாதீனமற்ற அத்தையிடம்
பால் கறந்து விளையாடியிருக்கக்கூடாது நாம்.
அக்கடும் புளிப்பை
பூனைகளோடு சேர்ந்து ருசித்தவர்களில்
சிலர்
இன்னும்
விழித்துக்கொள்ளவே இல்லை.
முலையில் பொங்கும்
“கனவைச்
சிசுக்களுக்குக் குடிக்கக் கொடுக்காதீர்கள்”
என்று
பிரசவ வார்டின் வாசலில்
நின்று கத்துகிறவர்கள்
என்னைப் போன்றவர்கள்.
அவர்களுக்கு அடிக்கடி எலும்பில்
வியர்க்கும் பிரச்சனைகொஞ்சம் விசிறிவிடுங்கள் போதுமானது.
மெல்ல மெல்ல நாகம்
சட்டை உரிப்பதைப் பார்க்கிறேன்
பாளைகள் கள்ளைச் சீறுகிறது
முகத்தில்.
இவ்வளவு உயரத்திலிருந்து
பார்க்க
உன் வீடு மோகமூட்டுகிறது
பனைகள் லயத்தோடு தலையாட்டுகின்றன.
என் காமத்தின் மூச்சிரைப்பிடம்
உன்
தெருநாய்கள் தோற்றுப்போகும்
நான் வந்துவிட்டேன்
வீதிமுனைக்கு.
துவைத்த ஆடைகள் மத்யானத்தில்
உலர்கின்றன
அடுக்களையில் புகை ஓய்ந்திருக்கிறது
‘ஞாயிறு’ உன்
வாசணைத்தைலத்தின் பெயர்
என் விடுமுறை நாளின்
பெயரும்கூட
கடந்தகாலத்தின் மார்பில்
அதன் ஒரு துளியைச் சுண்டு கமழட்டும்.
தாவரங்கள் நினைவாற்றல் மிக்கவை
நாகரிகத்தின் முதல் தீயை
ஈன்ற மூங்கில்கள் நாம்தான்
நன்றாக நினைவிருக்கிறது
நான் இருபதாவதுமுறை
சூரியனைச் சுற்றிவரும்போது
நீ ருதுவெய்தினாய்.
என் ரகசிய விலாஎலும்பே
நேரம் தீர்கிறது
உன் பிள்ளையை விளையாட
அனுப்பு.
பச்சைத் தானியங்கள் உலரும்
மைதானத்தில்
அவனின் நண்பர்கள் கூச்சலோடு
பட்டம் விடுகிறார்கள்
நீலமும் சிவப்புமாய் படபடத்து
நம் வாசலிலிருந்தும்
ஒன்று காற்றிலேகட்டும்.
அதன் வாலாக நான்
வருகிறேன் என்கிறது,
நீயுன் மடிச்சூட்டில்
அடைகாத்த
நானென் புயங்களில் தரித்துத்
திரிந்த
நீள நீல நாகம்.
உன் பாற்குடத்துக்கு
இரவில் உறையிட ஒரு சொட்டுக் கள் போதுமென்கிறது பனை.
யிரடர்ந்த குரங்கின் மார்பைப்போன்ற
மலை
குடிக்க யாருமற்று மல்லாந்து
கிடக்குமதன்
காம்பினுச்சியில் மேயும்
வரையாடு
உவமைகள் அடுக்கி மோனையொலிக்கப்
பாடும்
அவ்வைக்கு புலரியின் தேறல்
எங்களுக்கு அவளின் பெருமுலைப்பால்
பசியென்று துக்கமென்று வரும்
யாருக்கும் தந்துவிட
பெண்மையிடம் முலை இருக்கிறது
பாடல்களை இசைத்தபடி இந்த
மலையைக் கடந்து
சிசுப்பருவத்துக்குள்ளா போகிறோம்
துடிபாணனே நமக்கு முலைகள்
இல்லை
வெட்கி வெறும் மார்பை
பனையோலையில் மறைத்துக்கொள்வோம்
கூட்டத்திலொருவன் கேட்டுக்
கேட்டுக் கொல்கிறான்
தாய்ப்பாலும் முலைப்பாலும் ஒன்றா?
குறிஞ்சி யாழே
என் மொழிக்கும் எனக்கும்
பைத்தியம்தான் பிடித்திருக்கிறது
சற்று காதுகொடுங்களேன்
சிசுக்கள் முலை சப்புவதில்
சங்கக் கவியொருத்தியின் சந்தம் எழுகிறது.
அகால மலைப்பாதை மௌனமாய்
வளர்கிறது.
நிலவறைக்குள்
சுவர்களுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறார்கள்
கோடி கரங்கள் – யாரும்
பார்க்காத
கோடி நிறங்கள்
எங்கே? – தூரத்தில்!
ஆனாலும் ஆனாலும் ஆனாலும்
கஞ்சா இலைகள்
பொய்சொல்லாது.

பிற படைப்புகள்

Leave a Comment